கொரோனா 2 ஆம் அலையால் நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழப்பு

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பால் நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வேலை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார மத்திய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு முதல் அலையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. தொற்று பரவல் மிகத்தீவிரமாகப் பரவியதால் பல்வேறு மாநிலங்களும் பொதுமுடக்கத்தை அறிவித்தன. இந்தப் பொதுமுடக்கம் காராணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த விவரங்களை இந்தியப் பொருளாதார மத்திய கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கரோனா இரண்டாம் அலையால் நாட்டில் 97% குடும்பங்கள் தங்களது வருமானத்தில் சரிவைக் கண்டதாகத் தெரிவித்துள்ளது. மேலும் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களது வேலைகளை இழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால் நாடு முழுவதும் ஏப்ரல் மாத நிலவரப்படி வேலையின்மை விகிதம் 8% ஆகப் பதிவாகியுள்ளது. இந்த விகிதம் மே மாத இறுதியில் 12% ஆக அதிகரித்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் வேலையின்மை விகிதம் 23.5%ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் மீண்டும் வேலைவாய்ப்புகளைப் பெற ஒரு ஆண்டுகாலம் ஆகலாம் என இந்த நிறுவனம் கணித்துள்ளது. மேலும் வேலையின்மை விகிதம் 3% முதல் 4% வரை இருப்பது இயல்பானது என தெரிவித்துள்ள பொருளாதார கண்காணிப்பகம் தற்போதைய நிலை வரம்பு மீறியது என எச்சரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.