ஒரு இலட்சம் ரூபா கப்பம் பெற முயற்சி: விமானப்படை சிப்பாய்கள் மூவர் கைது!

கற்பிட்டி – கல்குடா பிரதேசத்தில் ஓட்டோவில் பயணித்த வியாபாரிகள் இருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பணத்தைக் கப்பமாகப் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் விமானப்படை சிப்பாய்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விமானப்படையின் பாலாவி உப பிரிவில் கடமையாற்றுகின்ற மூன்று விமானப்படை சிப்பாய்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த 6ஆம் திகதி கெப் ரக வாகனத்தில் வந்த சந்தேகநபர்கள் மூவரும் ஓட்டோவை துரத்திச் சென்று ஒரு இலட்சம் ரூபா பணத்தை மிரட்டிப் பெற முயன்றனர் என்று கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இதன்படி கைதான சந்தேகநபர்கள் மூவரும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.