இலங்கையின் ஆட்சிக் கவிழ்ப்புக்காக அமெரிக்கர்கள் ஊடுருவலா? : இராணுவத் தளபதி பதிலளிக்க மறுப்பு

அமெரிக்காவின் யுஎஸ்எயிட் நிறுவனத்தால் இலங்கையில் நடைமுறைப்படுத்தும் திட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் என்ற பெயரில், அமெரிக்காவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிடம் வினவியபோது, அது தொடர்பில் தன்னால் பதிலளிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

கொரோனாக் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கான அமெரிக்காவின் உதவிப் பொருள்களுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு அமெரிக்க விமானம் 5 நாள்களுக்கு முன்னர் வந்திருந்தது. அந்த விமானத்தில் 4 அமெரிக்கர்களும் வந்திருந்தனர். அவர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் இலங்கைக்கு வருகைத் தருகின்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கோ அல்லது வெளிவிவகார அமைச்சுக்கோ அறிவிக்கப்படவில்லை என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

வெளிவிவகார அமைச்சும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றது. மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ சூழ்ச்சி நடவடிக்கைகளின்போது, மியன்மாரில் இருந்த அமெரிக்க ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரும், இந்தக் குழுவில் இடம்பிடித்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது.

அதேவேளை, குறித்த நபர், சுற்றுலா விசாவின் ஊடாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கே இராணுவத் தளபதி பதிலளிக்க மறுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.