சம்மாந்துறை பிரதேசத்தை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும். மக்கள் மிகுந்த அவதானம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தால் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை சுகாதார வைத்திய பணிமனையின் பிரிவில் கடந்த 7 நாட்களுள் 112 மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகி இருப்பதுடன், இரு கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.

இந்நிலைமை தொடருமானால் சம்மாந்துறை பிரதேசத்தை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும். மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம். கபீர் தெரிவித்தார்.

கொரோனா ஒழிப்புச் செயலணியின் விசேட கூட்டம், சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.எம். முகம்மட் ஹனீபா தலைமையைில் (08) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது 51 கிராம சேவையாளர் பிரிவில் 12 பிரிவில் கடந்த தினங்களில் 112 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

“வர்த்தக அனுமதிப்பத்திரம் வழங்கும் நோக்கில், கடந்த ஓரிரு நாட்களில் நடமாடும் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் 136 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அதில் ஐவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“எமது பிரதேசத்தின் நிலையறிந்து, நடமாடும் வியாபாரிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, சுகாதார நடைமுறையை பின்பற்றாமல் வியாபாரிகள் காணப்பட்டால் அவர்களிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாமென மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.