237.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது.

யாழ்பாணம்: பருத்தித்துறைக்கு வடக்கே உள்ள கடற் பரப்பில் 237.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் இன்று (14) அதிகாலை பருத்தித்துறைக்கு வடக்கே உள்ள கடற் பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையிலேயே இக் கைது இடம்பெற்றுள்ளதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கரையை நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றை சோதனை மேற்கொண்ட போது கேரள கஞ்சா கொண்ட இரு கோணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அதிலிருந்து மூன்று சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து மேற்கொண் மேலதிக விசாரணையில், சந்தேகநபர்களால் கடலில் போடப்பட்ட கேரள கஞ்சா கொண்ட மேலும் 6 கோணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, முழு நடவடிக்கையின்போதும், 8 சாக்குகளில் அடைக்கப்பட்டுள்ள 237.5 கி.கி. ஈரமடைந்த கேரள கஞ்சாவை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

இக்கேரள கஞ்சா தொகையானது, சர்வதேச கடல் எல்லையில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து பெற்று குறித்த டிங்கிப் படகின் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாமென, சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு சுமார் ரூ. 71 மில்லியனாக இருக்கலாமென நம்பப்படுவதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

COVD-19 பரவுவதைத் தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுள்ளதுடன், கடற்படையால் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் 28 முதல் 29 வயதுக்குட்பட்ட பருத்தித்துறை மற்றும் அச்சுவேலியைச் சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவினர் இணைந்து இப்பகுதியில் தொடர்ந்நதும் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.