சிறப்பு முகாமில் முதலமைச்சர் ஓவியத்துடன் இலங்கை தமிழர்கள் போராட்டம்!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓவியத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் மீனவர்கள் 5 பேர் உட்பட 78 பேர் உள்ளனர். தங்களை பொய் வழக்கில் கைது செய்தும் அந்த வழக்கிலும் தண்டனைக் காலத்திற்கே மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே சட்டப்படி தங்களை விடுதலை செய்ய வேண்டும் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

சிறப்பு முகாமில் உள்ள இவர்களுக்கு உணவுப்படியாக தினசரி ரூ.175 வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு அவர்களே சமைத்துக் கொண்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், ஒரு நாள் உணவுப்படி மற்றும் தங்களின் சேமிப்பில் இருந்தும் மொத்தம்ரூ.18, 000 முதலமைச்சரின் நிவாரண நிதியாக வருவாய்த்துறையினர் முன்னிலையில் அகதிகளுக்கான துணை ஆட்சியர் ஜெமுனா ராணியிடம் இவர்கள் வழங்கினர்.

இந்நிலையில், திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 78 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 9ம் தேதி தொடங்கினர். தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்ய மேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர்.

போலீசார் & வருவாய்த்துறையினரின் பேச்சுவார்த்தையை அடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டு காத்திருப்பு போராட்டமாக தொடர்கின்றனர். இந்த போராட்டம் 15வது நாளாக தொடர்கிறது. குறிப்பாக இலங்கையின் மன்னார் மாவட்டம் தலைமன்னாரில் இருந்து கடந்த ஆண்டு மீன் பிடிக்க வந்த தமிழ் மீனவர்கள் 5 பேர், எதிர்பாரா வகையில் திசைமாறியதால், தமிழ்நாட்டு எல்லையில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஓராண்டுக்கு மேலாகியும் தங்களை விடுதலை செய்யவில்லை என்றும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

விசாரணை கைதிகளாக சிறைப்படுத்தப்பட்ட தங்களை நீதிமன்ற பிணையில் வந்தும் கைது செய்து மீண்டும் சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர். குடும்பங்களுடன் சேர்த்து வாழ்க்கையை தொடர உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரத்தில் அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது அலட்சியம் என்றும் தாமதிக்கப்படும் நீதி அநீதி என்றும் குற்றச்சாட்டியுள்ளனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்யக்கோரி ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பர்ன் நகரில் தமிழ் மாணவர்கள், ஆஸ்திரேலிய மாணவர்கள் இணைந்து அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக 15வது நாளான நேற்று சிறப்பு முகாமிற்குள், தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இலங்கை தமிழர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிடக் கோரி அவரது ஓவியத்தையும் கோரிக்கைகளை எழுதிய பதாகைகளையும் கையில் ஏந்தி சிறப்பு முகாமிற்குள்ளாக ஊர்வலமாகச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.