இராணுவத்தின் கனரக வாகனம் ஆற்றில் பாய்ந்ததில் இருவர் பலி!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கறுத்தப் பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

வாகரை இராணுவ முகாமிற்கு சொந்தமான கனரக வாகனமொன்று ஆற்றில் பாய்ந்ததிலேயே இரு இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதுடன், ஒருவர் செங்கலடி வைத்தியசாலையிலும், மூவர் மட்டக்களப்பு வைத்தியசாலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசரசிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகோயா பகுதியில் இருந்து செங்கலடி பதுளை வீதியூடாக கருங்கல் ஏற்றி வந்த போது குறித்த கனரக வாகனத்தில் ஆறு பேர் பயணித்துள்ளதுடன், வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகிய லொறி பாலமொன்றின் தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு கீழே வீழ்ந்துள்ளது.

இறந்தவர்களின் சடலங்கள் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரனைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.