கொரோனாவால் இறந்ததாக கூறிய கணவன்! காட்டிக் கொடுத்த சிசிடிவி: 27 வயது பெண் மரணத்தின் பின்னணி

இந்தியாவில் மனைவி கொரோனாவால் இறந்துவிட்டதாக கணவன் கூறிய நிலையில், அவர் தான் மனைவியை கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம், திருப்பதியில் இருக்கும் SVRR மருத்துவமனை அருகே, சூட்கேஸ் ஒன்று மர்மமான முறையில் எரிந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த பொலிசார், சூட்கேஸை திறந்து பார்த்த போது, உள்ளே சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.

அதன் பின், அவர் யார் என்று விசாரித்த போது, அவர் 27 வயது மதிக்கத்தக்க பெண் என்பது தெரியவந்தது. இதனால் பொலிசார் அங்கிருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆராய்ந்த போது, வாகனத்தில் வந்து, அந்த சடலம் போடப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பொலிசார் அந்த வாகன ஓட்டியை பிடித்து விசாரித்த போது, உயிரிழந்த பெண், சித்தூரில் இருக்கும் ராமசமுந்திரத்தில் வசிக்கும் புவனேஷ்வரி (27) என்பதும், இவர் ஹைதராபாத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு கடப்பாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டியை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 18 மாத மகள் உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஸ்ரீகாந்த் தனது வேலையை இழந்ததால், இந்த தம்பதிகளுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஸ்ரீகாந்த் மதுவுக்கு அடிமையாக, கடந்த 22-ஆம் திகதி நள்ளிரவில் இருவருக்கும் பிரச்சனை வலுத்துள்ளது. அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற, அவர் மனைவியை கொலை செய்து, அதன் பின் உடலை ஒரு சூட்கேஸில் வைத்து அடைத்து, வாடகைக் கார் உதவியுடன் வந்து மருத்துவமனை அருகில் போட்டுள்ளார்.

அதன் பின், அவர் மீண்டும் திரும்பி வந்து, அந்த சூட்கேஸை எரித்துள்ளார். ஆனால், இவர் தன் மாமியார் குடும்பத்தினரிடம், மனைவி கொரோனா பரவல் காரணமாக இறந்துவிட்டதாகவும், அவரை மருத்துவமனையிலே தகனம் செய்துவிட்டதாக பொய் கூறியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவத்திற்கு பின் தலைமறைவாக இருந்த ஸ்ரீகாந்தை பொலிசார் பிடித்து கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.