யாழ். மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள்!

யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்காக அடுத்தகட்டமாக, மேலும் 50 ஆயிரம் ‘சினோபார்ம்’ கொரோனாத் தடுப்பூசிகள் நாளை எடுத்துவரப்படவுள்ளன.

இவை, கொரோனாத் தொற்று அதிகமுள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டாம் கட்டடத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நிறைவடைந்தவுடன் இவற்றை மக்களுக்கு வழங்கும் பணிகள் ஆரம்பமாகும் என்றும், தடுப்பூசி வழங்கும் மையங்கள் தொடர்பில் அதிகாரிகள் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதற்கட்டமாக வழங்கப்பட்ட இரண்டு கட்டங்களுக்குமான தடுப்பூசிகளை யாழ்.மாவட்ட மக்கள் ஆர்வத்தோடு பெற்றுக்கொண்ட காரணத்தால், இந்த மேலதிக 50 ஆயிரம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது என நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் எம்.பி. தெரிவித்தார்.

மேலும், அடுத்தகட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும், யாழ். மாவட்ட மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலும் உரிய தரப்பினருடன் தொடர்ச்சியாகப் பேசி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.