கடலில் இறக்கப்பட்ட பஸ்களில் சிக்கி தமிழக மீனவர்களின் வலைகள் அழிவு.14 இலட்சம் ரூபா நட்டம் என்று அவர்கள் கவலை.

இலங்கை கடற்படையினரால் கடலில் இறக்கப்பட்ட பழைய பஸ்களில் அகப்பட்டு தமது வலைகள் அழிவடைந்தமையால் 14 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனத் தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இராமேஸ்வரத்திலிருந்து நேற்றுமுன்தினம் 472 விசைப்படகுகளில் சுமார் 1500 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை அரசால் அப்பகுதியில் பயனற்ற பஸ்கள் போடப்பட்டிருப்பதால் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்களின் மீன்பிடி வலைகள் பஸ்களில் மாட்டி அறுந்து கடலுடன் சென்றுள்ளன. இதனால் படகு ஒன்றுக்கு தலா 2 இலட்சம் ரூபா இழப்பீடு ஏற்பட்டுள்ளது எனக் கரை திரும்பிய மீனவர் எடிசன் தெரிவித்துள்ளார்.

“டீசல் விலை உயர்வு, மீன் விலை வீழ்ச்சி மற்றும் இலங்கை கடற்படை பிரச்சினைக்கு மத்தியில் தற்போது தமிழக மீனவர்கள் பரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கக் கூடாது என இலங்கை அரசு திட்டம் போட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதை இந்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது” என்று குற்றம் சுமத்திய தமிழக மீனவர்கள், உடனடியாகக் கடலில் போட்ட பஸ்களை எடுப்பதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று தமிழக செய்திகள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.