இரட்டை வேடமிட்டு அரசை குழப்பியடிக்க சிலர் சூழ்ச்சி ‘மொட்டு’வின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.

“எமது அரசில் எந்தவித குழப்பங்களும் இல்லை. ஆனால், இரட்டை வேடமிட்டு அரசைக் குழப்பியடிக்க எம்முடன் ஒட்டிக்கொண்டுள்ள சிலர் முயற்சிக்கின்றனர்.”

இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி.

இது தொடர்பில் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்ததாவது :-

“குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவே அரசில் குழப்பங்களை உருவாக்குகின்றார்.

ராஜபக்‌சவினரின் அரசாங்கத்தை அமைப்பதில் ஆரம்பத்தில் கைகொடுத்த நபர்களுக்கு அரசில் அமைச்சுப் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே எவரையும் நிராகரிக்கவில்லை.

ஆனால், அரசில் இருந்து கொண்டு ராஜபக்சவுடன் முரண்படும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டியுள்ளது. அரசாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை அவர்களுக்கு அரசில் வழங்க வேண்டிய இடத்தை வழங்கியுள்ளோம். தயாசிறி ஜயசேகரவுக்கு அவரது இராஜாங்க அமைச்சுப் பதவியில் திருப்தி இல்லை” – என்றார்.

இது குறித்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறுகையில்,

“அரசுக்குள் நெருக்கடியை ஏற்படுத்த யாரும் செயற்படவில்லை. அரசுக்குள் பல்வேறு கட்சியினர் ஒன்றிணையும்போது பல முரண்பாடுகள் ஏற்படும். அதனைப் பாரிய சர்ச்சையாக நாம் கருதவில்லை.

ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் சிலர் இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஜனவரி 8ஆம் திகதி வரைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவுடன் இருந்தவர்கள் அடுத்த நாள் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்தமை நினைவில் உள்ளது.

இவர்கள் இன்றும் அரசுக்குள் இரட்டை வேடமிட்டு அரசைக் குழப்பியடிக்க நடவடிக்கை எடுக்கின்றனர்”- என்றார்.

Leave A Reply

Your email address will not be published.