மலையகச் சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும்! – சாணக்கியன்

“மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறிப்பட வேண்டும். சிறுவர்களைப் பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாத் பதியுதீனின் இல்லத்துக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ஆம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்,

“குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறிப்பட வேண்டும். சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும். நீதிக்கு மேல் எவரும் இல்லை. இந்த விடயத்தில் சரியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.

இதேபோன்று நாட்டில் எத்தனையோ விடயங்கள் எங்களுக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றன. முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் இந்த விடயம் நடைபெற்றுள்ளமையினாலேயே வெளியில் தெரியவந்துள்ளது.

எனினும், எங்களுக்குத் தெரியாமல் எங்கெங்கோ எல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் தினந்தினம் நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றன. அத்துடன், சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும், பாலியல் துஷ்பிரயோகங்களும் தினந்தோறும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவ்வாறான செயற்பாடுகளைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசு விரைந்து முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவும் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களினால் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என நான் நம்புகின்றேன்.

குறித்த அதிகார சபைக்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இதன்காரணமாக அவர்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அதேபோன்று, சிறுவர்களின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதுடன், அவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் தங்களது இளம் வயதிலேயே பணிக்கமர்த்தப்படுகின்றமை காரணமாகவே இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகங்கொடுகின்றனர். எனவே, முதலில் முகவர்கள் ஊடாக சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுகின்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

சிறுவர்களைப் பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அரசிடம் வலியுறுத்துகின்றேன்.

அத்துடன், சிறுவர்களின் கற்றல் நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு அவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.