ஒரு நாளில் 4 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம், 2 மணித்தியாலத்திற்கு ஒரு குழந்தை துஷ்பிரயோகம்

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு பெண்கள் பாலியல் துஷ்பிரயோக்திறகு உட்படுத்தப்படுவதாகவும் இலங்கையின் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டிற்கான குற்றச் சம்பவங்கள் தொடர்பிலான புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி, குற்றம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் 5,292 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வருடத்தில் இலங்கையில் ஒவ்வொரு ஆறு மணித்தியாலத்திற்கும் ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய 1,642 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்த தகவல்கள் அமைந்திருப்பதாகவும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்படாத ஒரு போக்கு நாட்டில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ள இலங்கை பொலிஸ் திணைக்களம், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவை நிறுவியுள்ளதாகவும், குற்றங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

44 பொலிஸ் பிரிவுகளில் 44 பிரதேச பணியக பிரிவுகள் காணப்படுவதோடு, அவைகள் தொடர்ந்தும் செயற்பாட்டிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துஷ்பிரயோகம் தொடர்பில் மாத்திரமன்றி, துஷ்பிரயோக சம்பவங்களுக்கு இணையான சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடு செய்ய முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரதும் கடமை எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம்

கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 8,500 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்ததாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையளின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரன ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டு ஜூன் 12ஆம் திகதிவரை? சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 3,500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.