யாழ் பல்கலைக்கழக மாணவருக்கு கத்திக்குத்து இருவர் கைது (பிந்திய இணைப்பு)

யாழ்பாணம், நல்லூர், பழம் வீதியில் உள்ள தனியார் வீடு ஒன்றில் வாடகைக்கு அமர்ந்திருந்த யாழ்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட நான்காம் வருட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பு இறுதியில் கத்துக்குத்தில் முடிவடைந்துள்ளது.

கழுத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் தெற்கையைச் சேர்ந்த சகோதர மொழி இன ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைகலப்பில் ஈடுபட்ட இரு மாணவர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்து கத்திக்குத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய இணைப்பு :

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான கைகலப்பு கத்திக் குத்தில் முடிவடைந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தமிழ் மாணவர்களுக்கு இடையிலான கைகலப்பை தடுக்க முற்பட்ட பெரும்பான்மையின மாணவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெரும்பான்மையின மாணவன் சிகிச்சைகளின் பின் வைத்தியசாலையை விட்டுவெளியேறி இன்றையதினம் இடம்பெற்ற பரீட்சையில் கலந்துகொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் உள்ள தனியார் வீடொன்றில் மாணவர்கள் தங்கும் விடுதியில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் சிலர் கூடியிருந்த போது, அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மாணவன் ஒருவர் ஆத்திரமடைந்து மற்றொரு மாணவருக்கு கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.

அதனை அவதானித்த பெரும்பான்மையின மாணவர் ஒருவர் தடுக்க முற்பட்ட போது அவரது கழுத்தில் கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விஞ்ஞான பீட இறுதி ஆண்டு பரீட்சைகள் நடைபெறும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைகலப்பில் ஈடுபட்டனர். அவர்களுக்கு இன்றும் பரீட்சை நடைபெறுகின்றது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கத்தியால் குத்தினார் என்ற குற்றச்சாட்டில் மாணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

Comments are closed.