குருபரனுகாக பதவி துறக்கிறார் சுரேன் ராகவன்

யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டபீடத்தின் விரிவுரையாளர் சட்டத்தரணி, கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றில் முன்னிலையாவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அழுத்தத்தின் பேரில் கடந்த வருடத்தின் பிற்பகுதியில் பல்கலைக்கழக பேரவை தடை விதித்தமை காரணமாக, அவர் தன்னுடைய விரிவுரையாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவேண்டிய துரதிஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஒரு கல்விமானாக நான் அவருக்கு ஆதரவை தெரிவிப்பதோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளேன் என்று முன்னாள் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக உயர்கல்வி அமைச்சரை சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதுடன் கலாநிதி குருபரனுக்கு ஏற்பட்டுள்ள நிலை தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், கல்விமானொருவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு FUTA போன்ற இயக்கம் மௌனமாக இருப்பதும் ஆரோக்கியமான விடயமல்ல என்ப்தை சுட்டிக்காட்டுவதுடன் ,கல்விமான்களின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது முகப்புத்தகத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.