கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய 8 வயது சிறுவன்! செய்த துணிகர செயல்: குவியும் பாராட்டு

தமிழகத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். லொரி ஓட்டுனரான இவர் விருதுநகரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி குணா(29) மற்றும் குழந்தைகளான லித்திகா(8) மற்றும் நிதர்சன்(7) துலுக்கம்பட்டியில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த புதன் கிழமை மாலை குணா தன்னுடைய குழந்தைகளுடன் அப்பகுதியில் விறகு வெட்டும் பணிக்கு சென்றுள்ளார்.

அப்போது அருகில் இருக்கும் கிணற்றில், சிறுமி லித்திகா திடீரென்று தவறி விழுந்ததால், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குணா மகளை காப்பாற்றும் எண்ணத்தில், உடனடியாக கிணற்றில் குதித்துள்ளார்.

ஆனால், இருவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தினால், உயிர் பிழைக்க கத்திய போது, அருகில் இருந்த 8 வயது சிறுவன் லோஹித், சற்றும் தாமதிக்காமல் தண்ணீரில் குதித்து லித்திகாவை காப்பாற்றியுள்ளான்.

அதே சமயம் குணாவை காப்பாற்ற முயன்ற போது, அவர் தண்ணீருக்குள் மூழ்கியதால், அவரை காப்பாற்ற முடியவில்லை. அதன் பின் அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து குணாவின் உடலை மீட்டனர்.

இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்த பொலிசார் குணாவின் உடலை உடனடியாக பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை காப்பாற்றிய சிறுவன் அதே பகுதியில் வசித்து வரும் சந்திரசேகர் – தங்கம்மாள் இரண்டாவது மகன் என்பது தெரியவந்தது. ஹித் துலுக்கம்பட்டி அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றியதால், அவரை பாராட்டும் விதமாக, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு சிறுவனை நேரில் அழைத்து 5 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.