இலங்கையில் வாழ்க்கைச் செலவு 21 வீதத்தால் உயர்வு

தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை 12,500 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக தனியார் துறை ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 3500 ரூபா கொடுப்பனவு அடங்கலாக அவர்களின் மாத சம்பளம் 16,000 ரூபா வரை உயர்வடையுமென்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசிய ஆகக் குறைந்த சம்பள சட்டத் திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

எமது அரசாங்கத்தின் சௌபாக்கிய கொள்கைப் பிரகடனத்திற்கமைய ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவில் இருந்து 12 ஆயிரத்து 500 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதனை செயற்படுத்துவதே இந்த திருத்தத்தின் நோக்கமாகும். அனைத்து தனியார் துறையினரும் உள்ளடங்கும் வகையில் தேசிய குறைந்தபட்ச சம்பள சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாழ்க்கைச் செலவு தற்போது 21 வீதத்தால் உயர்வடைந்துள்ள நிலையில் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் வகையில் எமது ஊழியர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமாக இருந்தால் அது தொடர்பில் விசேட சட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.