வீடுகளிலேயே தங்க வைத்து, சிகிச்சை அளிக்கும் நடைமுறை.

நோய் அறிகுறிகள் இல்லாத கொவிட் தொற்றாளர்களை தமது வீடுகளிலேயே தங்க வைத்து, சிகிச்சை அளிக்கும் நடைமுறை இன்று (09) முதல் அமுல்படுத்தப்படுகின்றது.

அதுவரை காலமும் பரீட்சார்த்தமாக மேல் மாகாணத்தில் மாத்திரம் அமுல்படுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை, இன்று முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

2 முதல் 65 வயது வரை நோய் அறிகுறிகள் தென்படாத மற்றும் சிறு நோய் அறிகுறிகள் தென்படும் நோயாளர்களையே, வீடுகளில் தங்க வைத்து, வைத்தியர்களின் கண்காணிப்பிற்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

PCR அல்லது என்டிஜன் பரிசோதனைகளின் ஊடாக, கொவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்படுவோர், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் முழுமையான பரிசோதனையின் பின்னர், குறித்த கொவிட் தொற்றாளர் அவரது வீடுகளிலேயே தங்க வைத்து, சிகிச்சை வழங்க சுகாதார வைத்திய அதிகாரி பரிந்துரை செய்ய வேண்டும் என அமைச்சு குறிப்பிடுகின்றது.

இதன்பின்னர் , தொலைபேசி ஊடாக பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, வைத்தியர்களின் கண்காணிப்பில் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,24 மணிநேரமும் செயற்படும் 1390 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு, குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.