சுகாதாரப் பரிசோதகர்கள் இருவரை தாக்கிய இருவருக்கு விளக்கமறியல் – பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு.

திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹுந்தெனிய பிரதேசத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

திக்வெல்ல பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இருவரது கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றால் மரணமடைந்த ஒருவர் தொடர்பில் கிடைக்கப்பெற்றத் தகவலுக்கு அமைவாக அவரது குடும்பத்தாரை தனிமைப்படுத்துவதற்குச் சென்றபோதே, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இருவரும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளதுடன் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.