உங்க பசங்க காணாம போய்ட்டாங்களாமே.. சந்தேகத்தை ஏற்படுத்திய போன் கால் – சிறுவர்கள் மாயமான வழக்கில் திடீர் திருப்பம்

சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் வீட்டுக்கு தெரியாமல் கிளம்பிச் சென்ற 12ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் காவல்துறையினரிடம் சிக்கினர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஜேனன்கோட்டையை சேர்ந்த வேலுச்சாமி என்பவருடைய மகன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஹரிஹரன் மற்றும் வேடசந்தூர் அய்யனார் நகரை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் ஸ்ரீராம் என்ற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நண்பர்கள். இவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் சினிமாவில் டைரக்டர் ஆக வேண்டுமென்ற ஆசையில் வீட்டுக்கு தெரியாமல் 12000 பணத்தை எடுத்துக்கொண்டு கடந்த புதன்கிழமையன்று சென்னைக்குச் சென்று அங்கு வாடகைக்கு வீடு பிடித்து தங்கியிருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் தங்கியிருந்த வீட்டின் அருகே உள்ள ஒரு பெண்ணிடம் செல்போனை வாங்கி மற்றவர்கள் பேசுவது போல் வீட்டிற்கு போன் செய்து உங்க பசங்க காணாம போய்ட்டாங்களாமே கிடைத்தார்களா என்று பேசியுள்ளனர். சந்தேகமடைந்த மாணவர்களின் பெற்றோர் உடனடியாக வேடசந்தூர் இன்ஸ்பெக்டரிடம் அந்த நம்பரை கொடுத்து நடந்ததை கூறியுள்ளனர்.

உடனடியாக செயல்பட்ட வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் முருகன் அந்த நம்பருக்கு கால் செய்து விசாரித்த பொழுது இரண்டு சிறுவர்களும் அதே பகுதியில் ஒரு வீட்டில் தங்கி உள்ளதாக தெரியவந்ததையடுத்து உடனடியாக சென்னை காவல்துறை மூலமாகவும் சிறுவர்களின் உறவினர்கள் மூலமாகவும் சென்னையில் தங்கியிருந்த இருவரையும் மீட்டு வேடசந்தூர் கொண்டுவந்தனர்.

இரு மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் வேடசந்தூர் காவல் நிலையத்தில் வைத்து சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்கு அறிவுரை கூறி சிறுவர்களை பெற்றோர்களுடன் இன்ஸ்பெக்டர் முருகன் அனுப்பி வைத்தார். காணாமல் போன தங்களது மகன்கள் இருவரும் நலமுடன் கிடைத்ததால் பெற்றோர்கள் நிம்மதியுடன் அழைத்துச் சென்றனர்.’

Leave A Reply

Your email address will not be published.