தலிபான்களின் வெற்றியின் ரகசியம் என்ன?

ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரில் ஏற்பட்டுள்ள தலிபான்களினால் பெறப்பட்டுள்ள இந்த  வெற்றி பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஆகஸ்ட் 2021 இன் தொடக்கத்தில், அவர்கள் எந்த மாகாண  நகரையும் தமது  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கவில்லை. ஆனால் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அவர்கள் முழு நாட்டின் அதிகாரத்தையும் ஒருங்கிணைக்கும் நிலையை அடைந்தனர். இது மிக வேகமாக நடந்தது. அதனால்தான் சிலர் தலிபான்களை ‘தலிபான் பிளிட்ஸ்கிரீக்’ என்று அழைத்தனர்.

மேற்கத்திய ஊடகங்களால் எண்ணிக் கூட பார்க்க முடியாத தலிபான் எழுச்சி

தலிபான்களின் மறுமலர்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. அவர்கள் 2001 இல் தோற்கடிக்கப்பட்டு பின்வாங்கினாலும், அவர்களின் முக்கிய தலைமை அல்லது உறுப்பினர்கள் அழிக்கப்படவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்று மறுசீரமைக்கப்பட்டனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியபோது, ​​மேற்கத்திய ஊடகங்களுக்கு அது பெரிய செய்தியாக தெரியவில்லை.

இதேபோல், 2021 ல் தலிபான்களின் வெற்றி மேற்கத்திய ஊடகங்களுக்கு ஆரம்பத்தில் செய்தியாக முக்கியத்துவம் பெறவில்லை. தலிபான்களின் சமூக ஊடகங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் சில வாரங்கள் வரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்துவதாக பேசிய நேரத்திலும் , உலக ஊடகங்கள் அதை கண்டு கொள்ளவில்லை. எனவே, ஜூன் மாத இறுதிக்குள், இதுபோன்ற செய்திகள் அறிவிக்கப்பட்டபோது, ​​பலருக்கு இவற்றை உண்மை என  நம்புவது கடினமாகவே இருந்தது. இருப்பினும், தலிபான்கள் அதற்குள் வெகுதூரம் முன்னேறி வந்துவிட்டனர்.

தலிபான்கள் ஆரம்பத்தில் கிராமப்புறங்களில்தான் ,  தங்கள் அதிகாரத்தை ஒருங்கிணைத்தனர். பல மாதங்களாக சம்பளம் கிடைக்காத சாதாரண ஆப்கான் வீரர்கள் தலிபான்களுடன் சேர்ந்து கொண்டனர் அல்லது சரணடைந்தனர். ஆப்கானிஸ்தானில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.  சாதாரண ஆப்கானிஸ்தான் வீரர்களில் அநேகருக்கு ,  முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்கு காரணம் அவர்களின் மேலதிகாரிகள் அவர்களின் சம்பளத்தை சுரண்டியதுதான். இதன் விளைவாக அவர்கள் அரசாங்கத்தின் மீது ஏமாற்றமடைந்து வெறுப்போடு இருந்தனர். அது தலிபான்களுக்கு பெரும் ஆதரவாக இருந்தது.

Taliban expansion from July 9 to August 15 2021 (BBC)

கடந்த வாரம் வரை, 34 ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் உள்ள தலைநகரங்கள் எதுவும் தலிபான்களின்  கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் 34 க்கும் மேற்பட்ட மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு அப்பால் அவர்கள் கிராமப்புறங்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தனர்.

புத்திசாலித்தனமான தந்திரங்கள்

இதற்கிடையில், அவர்கள் மற்றொரு தந்திரோபாய, மிகவும் சிறப்புடன் கூடிய  “புத்திசாலித்தனமான” செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதிக எதிர்ப்பைக் கொண்டதாகக் கருதப்படும் பகுதிகளின்  அதிகாரத்தை விரைவில் கைப்பற்றும் நோக்கோடு , தலிபான்கள் ஆட்சி செய்யாத படாக்ஷன் போன்ற மாகாணங்களைக் கைப்பற்றுவதை நாம் பார்த்தோம். அவர்களின் தலைநகரங்கள் மற்றும் பிற முக்கிய நகரங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த மாகாணங்கள் இலகுவாக தலிபான்களின் வசமாகின.

தலிபான்களின் மற்றொரு செயல்பாடாக  நாட்டை விட்டு வெளியேறும் முக்கிய எல்லை சோதனைச் சாவடிகளைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்தியதாகும். இதன் விளைவாக, நிலப் பகுதிகளூடாக  நாட்டிற்கு நுழையும்  பாதைகளை அவர்களால் மூடி , அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. அதன்படி, விமானங்களின் வழியாக அன்றி , வேறு வழிகளால்  ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதோ அல்லது நுழைவதோ எளிதான காரியமாக இருக்கவில்லை.

Border checkpoints in Afghanistan (BBC)

ஆப்கானிஸ்தான் இராணுவத்தில் இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன. ஒரு குழு ஆப்கான் கமாண்டோக்கள் மற்றொன்று சாதாரண துருப்புக்கள். ஆப்கானிஸ்தான் இராணுவம் புள்ளிவிவரங்களில் பெரியது என்பது உண்மைதான். ஆனால் அதன் கணிசமான எண்ணிக்கையிலான வீரர்கள் சண்டையிடாமல் சரணடைந்தனர். அல்லது தலிபான்களோடு சேர்ந்தனர். அதன்படி, போரின் பாரம்  கமாண்டோக்கள் மற்றும் தலிபான் எதிர்ப்பு மிலீசியா குழுக்கள்  மீது விழுந்தது.

மாகாணங்கள் ஒவ்வொன்றாக விழத் தொடங்கின

ஒரு வாரத்திற்குள், அனைத்து ஆப்கானிஸ்தான் மாகாணங்களின் தலைநகரங்களும் தலிபான்களிடம் வீழ்ந்தது எவராலும் நம்பமுடியாதது. அங்கு என்ன நடந்தது என்பது இப்போது தெளிவாக உள்ளது. சில மாகாணங்களின் ஆளுநர்கள் சண்டையின்றி அந்த மாகாணங்களை ஒப்படைத்தனர். கடந்த காலங்களில் இதன் ஒரு பகுதியையாவது தலிபான்களுடன் இணைக்க உடன்பட்டிருப்பார்களோ என்பது சந்தேகமே. ஆப்கான் அரசியல் எப்போதுமே ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அங்கு நிரந்தர எதிரிகள் இருந்தனர், ஆனால் பலர் நிரந்தர நண்பர்களோ அல்லது எதிரிகளோ அல்ல. எனவே, கடந்த காலங்களில் சில ஆளுநர்கள் ஏதேனும் உடன்பாட்டை எட்டினார்களா என்பது சந்தேகமே. ஜலாலாபாத், பாமியான் போன்ற பகுதிகளில் தலிபான்கள் சண்டையிட்டிருந்தால் இவ்வளவு விரைவாக காபூலை அடைந்திருப்பார்கள் என்று நினைத்தும் பார்க்க முடியாது.

இதற்கிடையில், சில ஆளுநர்கள் தலிபான்களின் வெற்றியைப் பார்த்து அவர்களுடன் இணைந்திருக்கலாம். ஆனால் பல மாகாணங்களின் தலைவர்கள் முன் திட்டமிடல் இல்லாமல் தாலிபான்களிடம் சரணடைந்திருப்பார்களா என கற்பனை செய்வது கடினமானது.

இந்த வழியில், தலிபான் படைகளை எதிர்த்துப் போராட முயன்ற கவர்னர்கள் கூட, மாகாணத்திலிருந்து மாகாணத்திற்கு என , சிக்கிக் கொண்டு , தனிமைப்படுத்தப்பட்டு, தோற்கடிக்கப்பட்டனர். பலர் எளிதான பாதையைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் பலர் சரணடைந்தனர் அல்லது தப்பி ஓடினர்.

விளம்பரம்

இந்த முறை தலிபான்கள் தங்களை தீவிரவாதிகளாக அல்லாமல் எதிர்காலத்திற்கான லட்சியங்களைக் கொண்ட ஒரு இராஜதந்திர குழுவாக தம்மை சித்தரித்தனர். வெளிநாட்டவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரும் அவர்களின் பிரதிநிதிகள் ஆங்கிலம் பேசும், நன்கு உடையணிந்தவர்களாக இருந்தனர். அவர்கள் எதிர்கால அரசாங்கத்தை ஏற்று நடத்த முடியும் என்பதான நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றனர்.

மறுபுறம், அவர்கள் யாரையும் பழிவாங்கப் போவதாகவோ அல்லது 1996-2001 இல் இருந்ததைப் போல விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளை வெறுப்பவர்களாகவோ தம்மை சித்தரிக்கவில்லை. அவர்கள் பொதுவாக சரணடைந்த ஆப்கானியர்களை கௌரவமாக நடத்தினார்கள். பயங்கரமான சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்பதற்காக அல்ல. ஆனால் அவர்களில் சிலரைத் தவிர, இது ஒரு பொதுவான வழக்கம் அல்ல. அவர்களும் வேடிக்கையான மனிதர்கள் போல் நடிக்க முயன்றனர். அத்தகைய ஒரு நிகழ்வு, சிறுவர் பூங்காவில் ஹெராட் நகரத்தை கைப்பற்றிய தாலிபான்களின் வேடிக்கையான புகைப்படங்களை வெளியிட்டது. அவர்களும் பொழுது போக்கு பிரயர்கள்தான் என மக்களிடம் காட்டிக் கொள்ள முயன்றனர். இந்த “பிரச்சாரப் போரில்” குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் சிக்கியுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஹெராட் பொழுதுபோக்கு பூங்காவில் தலிபான்கள்

இன்றுவரை, அவர்கள் பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் போன்ற தொழில் வல்லுநர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகவும், பெண்கள் கல்வி உரிமையைப் பாதுகாப்பதாகவும் பகிரங்கமாகக் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் நீண்ட காலமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் அவர்களின் நடைமுறை வேறுபட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே அந்தவகையில் , அவர்கள் பிரச்சாரத்தை மட்டுமே எடுத்துச் செல்கின்றனர். எடுத்துச் செல்கின்றனர்.

அக்காலத்தின் தீவிரவாதத் திட்டத்தை இன்னும் “புத்திசாலித்தனமான” முறையில் செயல்படுத்தினால் மட்டுமே, எதிர்கால தாலிபான் ஆட்சி 1996-2001 இலிருந்து வேறுபடும் என்று  கூற முடியும்.

ஆசிரியரின் குறிப்பு: தலிபான்களின் வெற்றிக்கு காரணமான சதித்திட்டங்கள் குறித்த சர்வதேச காரணிகள் மற்றும் பார்வைகள் இங்கு விவாதிக்கப்படவில்லை, ஏனெனில் இது ஒரு தனி, அதிக விசாரணை பிரச்சினை. நாங்கள் விரைவில் அதைப் பற்றி விவாதிப்போம்.

– ஆக்கம் : மந்திரண

தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.