மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்! – சம்பிக்க

“சர்வாதிகார கொள்கையுடைய அரசுக்கு நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள். மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும். ஒருவார காலத்துக்கு மாத்திரம் நாட்டை முடக்குவதால் எவ்வித பயனும் ஏற்படாது. ஏனெனில் கொரோனாவின் தாக்கம் தீவிரடைந்துள்ளது. குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்காவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-

“போரை வெற்றி கொண்டதைப் போன்று கொரோனா வைரஸ் தாக்கத்தையும் வெற்றிக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசு செயற்பட்டதால் இன்று நாட்டு மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள்.

அரசின் மந்தகரமான செயற்பாடு காரணமாக நாட்டு மக்கள் வாழ்வா, சாவா என்ற போராட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

சித்திரைப் புத்தாண்டுக் கொரோனாக் கொத்தணியைத் தொடர்ந்து வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. ஆகவே, நாட்டை முடக்குங்கள் எனப் பல்வேறு தரப்பினர் அரசிடம் வலியுறுத்தினர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட பேராசிரியர் சுகத் அகம்பொடி கடந்த 5 ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் வலைத்தளத்தில், “அரசு டெல்டா வைரஸ் தாக்கத்துக்குச் சவால் விடுத்துள்ளது. ஆகவே, இனிவரும் நாட்களில் ஒரு நாளில் 150 தொடக்கம் 200 வரையிலான உடல்களைத் தகனம் செய்யும் தகனசாலைகளை இனித் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று அரசின் பொறுப்பற்ற செயற்பாட்டை விமர்சித்து நாடு எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல் தன்மையை விளக்கிப் பதிவேற்றம் செய்திருந்தார்.

பின்னர் அவர் ஆகஸ்ட் 10 ஆம் திகதி “கொரோனாத் தொற்று தீவிரமடைந்துள்ளது. ஆகவே, நாட்டை மூன்று வாரங்களுக்குக் கட்டாயம் முடக்க வேண்டும். இல்லாவிடின் 20 நாட்களுக்குள் 1200 மரணங்கள் பதிவாகும். இவற்றில் 700 மரணங்களை மனிதப் படுகொலையாகக் கருத வேண்டும்” என்று பதிவேற்றம் செய்திருந்தார்.

இவரது கணிப்பு இன்று உண்மையாகிவிட்டது. கொரோனாத் தொற்றால் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்திலிருந்து அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை. நாட்டை முடக்குங்கள் என்று விசேட வைத்திய நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைக்கு ஜனாதிபதி செவிசாய்க்கவில்லை.

ஆசிய நாடுகளில் கொரோனாத் தொற்றால் பதிவாகும் மரணங்களின் தரப்படுத்தலில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது. இரண்டாவதாக மலேசியா உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மலேசிய அரசு பலவீனமடைந்துள்ளது என்று அந்த நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.

மக்களின் சிந்தனைக்கும், கருத்துக்கும் மதிப்பளித்து அந்த நாட்டுப் பிரதமர் பதவி விலகினார். இதுவே சிறந்த அரச தலைவருக்கு எடுத்துக்காட்டு. இவ்வாறான கலாசாரத்தை எமது நாட்டில் காண முடியாது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பட்ட தரப்படுத்தல் காணப்படுகின்றது.

அரசு வழங்கும் தரவுக்கும், பிரதேச சுகாதாரப் பணிப்பாளர்கள் வழங்கும் தரவுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.இதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொறுப்புப்கூற வேண்டும்.

கொரோனாத் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு 10 நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் நாட்டை முடக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் வழமை போன்று இடம் பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வார காலத்துக்கு மாத்திரம் நாட்டை முடக்குவதால் எவ்வித பயனும் கிடைக்கப் பெறாது. இதனால் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடையாது.

சுகாதார வழிமுறைக்கு அமைய மூன்று வார காலத்துக்கு நாட்டை முடக்குங்கள் என்றே சுகாதாரத் தரப்பினர்கள் குறிப்பிட்டார்கள்.

நாட்டை ஒருபோதும் முடக்க முடியாது என்று ஜனாதிபதி பிடிவாதமாக இருந்தார். இவரது தீர்மானத்தை நாட்டு மக்கள் புறக்கணித்துத் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள்.

அரசைப் புறக்கணித்து மக்கள் ஊரடங்குச் சட்டத்தை சுயமாகப் பிறப்பித்து ஜனாதிபதிக்கும், அரசுக்கும் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள்”என்றார்.

Leave A Reply

Your email address will not be published.