ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் – கடத்தப்பட்ட சிறுவன் 6 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு

சேலம் அருகே கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் 6 நாட்களுக்கு பிறகு போலீஸாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே நச்சுவாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி ( 40 ). கூலி வேலை செய்து வரும் இவருடைய மனைவி லதா பஞ்சுகாளிப்பட்டியில் உள்ள தனியார் (பெருமாள் சில்க் ஹவுஸ்) ஜவுளி கடை உரிமையாளர் சரவணன் என்பவரது வீடு மற்றும் கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் பழனிச்சாமி, லதா தம்பதியின் 14 வயது மகன் சபரி கடந்த 22 ம் தேதி விளையாடச் சென்றபோது திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனைத் தேடி வந்தனர்.

இதனிடையே கடந்த 26 ம் தேதி சிறுவனின் தாய் லதா பணியாற்றும் துணி கடை உரிமையாளர் சரவணன் என்பவரின் தொலைபேசிக்கு திருட்டு செல்பேன் மூலம் மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு சபரியை தான் கடத்தி வைத்துள்ளதாகவும், ரூபாய் 50 லட்சம் பணம் கொடுத்தால் திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறி தொடர்பை துண்டித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீண்டும் 27 ம் தேதி மற்றொரு திருட்டு செல்போன் மூலம் சிறுவனை கட்டிப்போட்டு அடைத்துள்ள வீடியோவை சரவணனுக்கு அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து மாயமான சிறுவன் கடத்தப்பட்டுள்ளார் என்பதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் சிறுவனை விரைந்து மீட்க ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் 4 தனிப்படைகளை அமைத்தார்.செல்போனில் பேசிய இடங்கள், முதலான விபரங்களை வைத்து சேகரித்த தகவலின்படி சேலம் மாநகர் குகை பகுதியைச் சார்ந்த சந்திரன் மகன் செல்வகுமார் ( 39 ) என்பது தெரியவந்தது.

மேற்கண்ட முகவரியில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது 4 வருடங்களுக்கு முன்பு குடியிருந்து சென்றுவிட்டதாக தெரியவந்தது . அங்கு அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் போலீசார் விசாரித்ததில், சேலம் மாநகரம் , சீலநாயக்கன்பட்டி எம்ஜிஆர் நகரில் குடியிருப்பதாக கிடைத்த தகவலின்படி அங்கு சென்றபோதும் செல்வகுமார் அங்கு இல்லை . தொடர்ந்து தேடி செல்வகுமாரை கைது செய்து, தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பணத்திற்காக கடத்தியது தெரியவந்தது.

சேலம் மாநகர், பராசக்தி நகரில் வாடகை கட்டிடத்தில் MSK Mahitha , Interior Work Decorator என்ற பட்டறை நடத்தி வந்ததாகவும், பெரிய அளவில் வருமானம் இல்லை என்பதால் குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்கம் நோக்கில் கடந்த 22-ம் தேதிஅன்று மேட்டூர் சென்று மது அருந்திவிட்டு சிந்தாமணியூர் அருகில் திரும்பி வரும்போது ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த சிறுவனை காரில் கடத்திக் கொண்டு வந்து பராசக்தி நகரில் அடைத்து வைத்திருப்பதாக கூறிய தகவலின் பேரில் அங்கு சென்று சிறுவனை ஆகஸ்ட் 28 தேதி பிற்பகல் 2 மணிக்கு தனிப்படையினர் மீட்டனர்.

கை, கால்கள் கட்டப்பட்டு, வாய், முகம் உள்ளிட்டவைகள் பார்சல் செய்யும் டேப்பால் ஒட்டிவைத்திருந்ததோடு, கடந்த 6 நாட்களாக சிறுவனுக்கு உணவு ஏதும் வழங்கப்படாததால் மிகவும் பலவீனம் அடைந்த சிறுவனை போலீசார் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.