ராஜஸ்தானில் கார் மீது லாரி மோதி 12 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம், நாகெளர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆன்மிக சுற்றுலாப் பயணம் சென்றவர்களின் கார் மீது லாரி மோதியதில் 8 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயினியிலிருந்து ஆன்மிக சுற்றுலாப் பயணம் செய்ய 12 பேர் இரு வாகனங்களில் புறப்பட்டு ராஜஸ்தான் மாநிலம், நாகெளருக்கு வந்தனர். இங்கு ராம்தேவரா, கர்னி மாதா கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு வாகனம் முன்னாலும், அதற்குப் பின்னால் மற்றொரு வாகனமும் பின்தொடர்ந்தபடி சென்றனர்.
செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் நாகெளர் மாவட்டம், பிகானேர்- ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ பாலாஜி கோயில் பகுதி அருகே இரு வாகனங்களும் வந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதியது. விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்த பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 4 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.