பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்கில் 900 கோடி! – விஷயம் தெரிந்து மிரட்சியடைந்துள்ள வங்கி மேலாளர்

பீகார் மாநிலம் கட்ஹார் மாவட்டம் பாஸ்டியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அஷிஷ்ட் குமார். அவர்கள் இருவரும் பள்ளி மாணவர்கள். அவர்களுக்கு உத்தர் பீகார் கிராமின் வங்கியில் வங்கிக் கணக்கு உள்ளது. அவர்கள் இருவரும் தங்களது பள்ளிச் சீருடைக்காக அரசு எவ்வளவு ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது என்று சோதனை செய்வதற்காக அருகிலுள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்றுள்ளது. அப்போது அவர்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைப் பார்த்து மிரட்சியடைந்துள்ளனர்.

வங்கியில் சோதனை செய்தபோது விஸ்வாஸ் வங்கிக் கணக்கில் 60 கோடிரூபாய் பணம் இருந்துள்ளது. அதேநேரத்தில் அஷிஷ்ட் குமார் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது. இந்த விவகாரம் தெரியவந்த நிலையில் வங்கி மேலாளர் மனோஜ் குப்தாவும் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, அவர் அந்தப் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுக்க முடியாதபடி முடக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக இதேபோன்றதொரு சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். இவரது வங்கி கணக்கில் வங்கி ஊழியர்களின் தவறால் சுமார் 5.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கி கணக்குக்கு பணம் வந்த மகிழ்ச்சியில் கவுண்டமணி காமெடியில் வருவது போல் இந்த ரோடு என்ன விலை.. இந்த வீடு என்ன விலை.. ஐயோ இப்ப நான் எதையாவது வாங்கனுமே என்கிற ரீதியில் இஷ்டத்துக்கு பணத்தை செலவு செய்துவிட்டார். தன் கணக்கு பணம் வந்தது குறித்து வங்கிக்கும் இவர் தெரியப்படுத்தவில்லை.

இந்நிலையில் பணத்தை வேறொருவர் கணக்கில் தவறாக வரவு வைத்துவிட்டோம் என உணர்ந்த வங்கி ஊழியர்கள் ரஞ்சித் தாஸ் அக்கவுண்டில் பணம் டெபாசிட் ஆனதை உறுதி செய்தனர்.
ரஞ்சித் தாஸ் அக்கவுண்டை சோதனை செய்து பார்த்தால் அதில் மினிமம் பேலன்ஸை தவிர ஒரு பைசா இல்லை. அந்த இளைஞரை தொடர்புக்கொண்டு உங்கள் கணக்கில் 5.5 லட்சத்தை தவறாக வரவு வைத்துவிட்டோம் பணத்தை திருப்பித்தாருங்கள் எனக் கேட்டுள்ளனர்.

அந்த இளைஞர் கூறிய பதிலை கேட்டு வங்கி ஊழியர்கள் ஷாக்காகி உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி எல்லா மக்களின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுறேன்னு வாக்குறுதி குடுத்தார். அதில் முதல் தவணையாக 5.5 லட்சம் என்னுடைய அக்கவுண்டில் போட்டிருக்கார். நான் பணத்தை செலவு செய்துவிட்டேன் திருப்பித் தரமுடியாது எனக் கூறீயுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.