அமுலில் உள்ள அவசரகாலச் சட்டம் நெடுநாளுக்கு நீடிக்கப்படக்கூடாது! பங்காளியான சு.க. வலியுறுத்து.

“அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்பு என்ற போதிலும் அத்தியாவசிய தேவையின் நிமிர்த்தமே அதற்கு ஆதரவாக வாக்களித்தோம். எனவே, தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டம் நெடுநாளுக்கு நீடிக்கப்படக்கூடாது.”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ச தலைமையிலான அரசின் பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர ஊடகங்களிடம் கூறியவை வருமாறு:-

“இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது. அதற்குக் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம். எனினும், இராணுவ மயமாக்கலை இலக்காகக்கொண்டு அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. மாறாக உணவுப்பொருட்களைப் பதுக்கி, கருப்பு வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாலேயே அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

குறித்த சட்டத்துக்கு கொள்கை ரீதியில் நாம் எதிர்ப்பு என்ற போதிலும், அத்தியாவசிய தேவையின் நிமிர்த்தம் ஆதரவாக வாக்களித்தோம்.

எது எப்படி இருந்தாலும் அவசரகாலச் சட்டம் நீண்டகாலத்துக்கு நீடிக்காது என நம்புகின்றோம். அதற்கான தேவையும் எழாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.