வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம் – ஜனாதிபதி பணிப்புரை

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைத்து தரப்பினரதும் PCR பரிசோதனை அறிக்கைகளை விமான நிலையத்திலேயே பெற்று அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கொவிட் – 19 வைரஸ் தொற்றுத்தடுப்பு செயலணி மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுடனான கலந்துரையாடலனின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, முப்படைத் தளபதிகள், விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோரை குடிவரவு நடைமுறைகளுக்கு முன்னதாக PCR பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கும் வரை தனியாக ஓரிடத்தில் வைப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னர், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகை தருவோர் PCR பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்கக்கூடிய வழிகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

PCR பரிசோதனை அறிக்கை கிடைப்பதை விரைவுபடுத்துவதற்காக விமான நிலைய வளாகத்தில் ஆய்வுக்கூட நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.