லொகான் துப்பாக்கியால் சுட முயன்றார். ஆனால் அது இயங்கவில்லை – கைதிகள் சொல்கிறார்கள் (வீடியோ)

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து கலவரம் செய்ததோடு , கைதிகளை சுட முற்பட்டுள்ளார் என்பது உண்மை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹன பண்டார ஆகியோர் இந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக சிறைச்சாலைக்குச் சென்றிருந்தனர்.

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த கைத்துப்பாக்கியால் சுட முயன்றார். ஆனால் கைத்துப்பாக்கி அப்போது வேலை செய்யவில்லை என்றும் சிறை அதிகாரிகள் தம்மை காப்பாற்றியதாகவும் , கைதிகள் தங்களிடம் கூறியதாக எதிர்க் கட்சி நாடாளுமன்ற குழுவினர், கைதிகளை சந்தித்து விட்டு வெளியே வந்து ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

லொஹான் ரத்வத்தையின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் உண்மையானவை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில் துப்பாக்கியுடன் வந்ததாகவும் , போதையில் இருந்தமையால் துப்பாக்கியை எடுத்து அச்சுறுத்தியதாகவும் கைதியொருவர் கூறியதாக மனோ கணேஷன் கூறினார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அநுராதபுரம் சிறைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் சிறை கைதிகளை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் விவகாரம் ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி வெளியிடுமளவிற்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது குறித்து நிலைமையை ஆராய்வதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் , ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார உள்ளிட்டோர் இன்று அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றனர்.

தமது சிறைச்சாலை விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நாம் சிறைச்சாலைக்கு வருகை தரவுள்ளதாக ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த போதிலும் இன்று எமக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து சபாநாயகரை தொடர்பு கொண்டதன் பின்னரே எமக்கு உள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எமக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பிரஜைகளின் நிலைமை என்னாவாயிருக்கும் என்பது இதன் மூலம் தெளிவாகிறதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாம் உள்ளே சென்று தெரிந்து கொண்ட தகவல்களுக்கமைய, அண்மையில் லொஹான் ரத்வத்தையின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில் துப்பாக்கியுடன் வந்ததாகவும் , போதையில் இருந்தமையால் துப்பாக்கியை எடுத்து அச்சுறுத்தியதாகவும் கைதியொருவர் கூறினார். இதன் போது தவறுதலாகவேனும் அந்த துப்பாக்கி இயக்கப்பட்டு நாம் கொல்லப்பட்டிருந்தால் நாம் அவரை கொல்ல முற்பட்டதால் ஏற்பட்ட கலவரம் என்று கூறியிருப்பார்கள் என்றும் அந்த கைதிகள் எம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் குறித்த கைதிகளை விடுதலை செய்து தமிழ் மக்களின் மனதை வெல்லுமாறு அரசாங்கத்திடம் தாம் கேட்டுக் கொள்வதாகவும் மனோகணேசன் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.