வீதிகளில் பொதுமக்கள்! வீடுகளுக்குள் வைரஸ்!! – ஊரடங்கை மதித்து நடக்குமாறு ஜீவந்தர வேண்டுகோள்

“நாடு முழுவதும் கொரோனாவின் டெல்டா வைரஸே தாண்டவமாடுகின்றது. இந்நிலையில், நாட்டைத் திறக்கும் திகதியை அரசு ஒக்டோபர் முதலாம் திகதி வரைக்கும் பிற்போட்டமை வரவேற்கத்தக்கது. ஆனால், ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீதிகளில்தான் பயணிக்கின்றார்கள். இதனால்தான் வைரஸ்கள் இன்று வீடுகளுக்குள் புகுந்துள்ளன.”

– இவ்வாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இது தொடர்ப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஊரடங்கை மதித்து நடந்து வீட்டிலுள்ள அனைவரினதும் உயிர்களையும் காப்பாற்றுமாறு வெளியில் திரியும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அத்தியாவசிய தேவைகளுக்கு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்லுங்கள்.

இன்று வெளியிடங்களில் சமூக இடைவெளிகளைக் காணமுடியாமல் இருக்கின்றது.

வீட்டிலிருந்து வெளியே போகும்போதும் வீட்டுக்குள் வந்த பின்னரும் சுகாதார விதிமுறைகளை உரிய வகையில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகளை அரசு அதிகரிக்க வேண்டும். மாவட்டங்களுக்கிடையில் அல்லது மாகாணங்களுக்கிடையில் இறுக்கமான கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும்.

இலங்கை இன்னமும் கொரோனாவின் சிவப்பு அபாய வலயத்துக்குள் இருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அரசு அவசரப்பட்டு நாட்டை முழுமையாகத் திறக்கக்கூடாது. எதிர்வரும் வாரங்கள் தீர்க்ககரமானவை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.