முதுகெலும்புள்ள வேட்பாளர்களை கண்டறிந்து வாக்களிக்க வேண்டும் – மக்களிடம் மனோ கோரிக்கை

“ஆளும்கட்சியோ, எதிர்க்கட்சியோ முதுகெலும்புள்ள, துணிச்சலுள்ள, நாட்டின் ஜனாதிபதி முதல் பிரதமர் வரை நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்கக்கூடிய, எமது மக்களின் அபிலாஷைகளையும், துன்பங்களையும் சிங்கள மொழியில் தேசிய அரங்குகளில் எடுத்து வைக்கக்கூடிய, ஆங்கில மொழியில் சர்வதேச அரங்குகளில் எடுத்துக்கூறக்கூடிய வேட்பாளர்களைக் கண்டறிந்து அவர்களின் கட்சி சின்னத்துக்கும், அதன் பின் அந்த வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலங்கங்களுக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும்.”

– இவ்வாறு முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது:-

“சஜித் தலைமையிலான அரசை அமைக்கவே நாம் போராடுகின்றோம். அந்த நம்பிக்கை எமக்கு நாளுக்கு நாள் வலுக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியைக் கைப்பற்றுவது ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களின் நோக்கமாக இருக்கலாம். கூட்டணிக்காரர்களான எமக்கு அதுவல்ல நோக்கம். எமது நோக்கம், அலரிமாளிகையைக் கைப்பற்றுவதாகும். அங்கே பிரதமர் ஆசனத்தில் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாஸவை அமரச் செய்வதாகும்.

எது எப்படி இருந்தாலும் ஆளும்கட்சியோ, எதிர்கட்சியோ இந்த நாட்டில் ஜனநாயகரீ தியாக சண்டைபோட வேண்டிய இடத்தில் சண்டையிட்டு, அழுத்தம் திருத்தமாக எமது மக்களின் அபிலாஷைகளுக்காக நிமிர்ந்து நின்று குரல் கொடுக்கக்கூடிய வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தெரிவு செய்ய வேண்டியது தமிழ், முஸ்லிம் மக்களின் கடமை.

நேர்மை உள்ள, தூரப்பார்வை உள்ள, அர்ப்பணிப்பு உள்ள, துணிச்சல் உள்ள, பன்மொழி அறிவு உள்ள, விலை போகாத வரலாறு உள்ள, சொந்த இனப்பற்று உள்ள, சகோதர இன, மதங்களின் மீது மரியாதை உள்ள, உண்மையான தேசப்பற்றுள்ள வேட்பாளர்கள் யார் என்பதைக் கண்டறியுங்கள். இதைக் கண்டறிவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. உங்கள் முன் வரும் வேட்பாளர்களைக் கொஞ்சம் கவனமாக ஒவ்வொருவராக அவதானித்துப் பார்த்தால் உண்மை அடையாளத்தை அறியலாம். எக்காரணம் கொண்டும் இதைக் கண்டறிய தவறிவிட்டீர்கள் என்றால், அடுத்து ஐந்து வருடங்கள் உங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.

இதை நான் இன்று எனது மாவட்டமான கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு மாத்திரம் கூறவில்லை. நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் இந்து, இஸ்லாம், கத்தோலிக்க தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சொல்கின்றேன். ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்குப் பிறகு இதைச் செய்ய முடியாது. இப்போதே உங்கள் தீர்மானங்களை எடுங்கள்” – என்றார்.

Comments are closed.