அமெரிக்கா ‘டிரோன்களை’ அனுப்பினால் விளைவுகள் மோசமாக இருக்கும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய தொடங்கியதும் தலீபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டை ஆக்கிரமித்தனர். கடந்த மாதம் 15-ந்தேதி ஒட்டுமொத்த ஆப்கானிதானும் தலீபான்கள் வசமானதை தொடர்ந்து, 30-ந்தேதி அமெரிக்க படைகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறின.

முன்னதாக காபூல் விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா ‘டிரோன்’ (ஆளில்லா குட்டி விமானம்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் அப்பாவி பொதுமக்கள் சிலரும் கொல்லப்பட்டனர். இதற்கு அமெரிக்க ராணுவம் மன்னிப்பு கோரியது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா ‘டிரோன்களை’ அனுப்பினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தலீபான்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ‘‘ஆப்கானிஸ்தானின் வான்வெளி அமெரிக்க டிரோன்களால் ஆக்கிரமிக்கப்படுவதால், அனைத்து சர்வதேச உரிமைகள், சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் மீதான உறுதிபாட்டை அமெரிக்கா மீறுவதை சமீபத்தில் பார்த்தோம். இந்த மீறல்கள் சரிசெய்யப்பட வேண்டும் மற்றும் தடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மோசமான, எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.