அரசியல் பழிவாங்கல்களுக்கே முதலிடம் வழங்கியது நல்லாட்சி – மஹிந்த கடும் சாடல்

“கடந்த நல்லாட்சி அரசு அபிவிருத்தி நிர்மாணப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை. அரசியல் பழிவாங்கல்களுக்கே முன்னுரிமை வழங்கியது. எனவே, 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தையடுத்து இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்திகள் எமது புதிய ஆட்சியில் முழுமைப்படுத்தப்படும்”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்த காலத்தில் கொழும்பு நகரை அழகுப்படுத்தும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சேறிப்புறங்கள் பெருமளவில் இல்லாதொழிக்கப்பட்டு பலர் முறையான குடியிருப்புக்களில் குடியமர்த்தப்பட்டார்கள். 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தையடுத்து இந்தத் திட்டங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டன.

சேறிப்புறங்களை இல்லாதொழித்து மக்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கான குடியிருப்புக்கள் வழங்கப்படும். தலைநகரை அழகுபடுத்தும் ஜனாதிபதியின் திட்டம் புதிய அரசில் முழுமைப்படுத்தப்படும். அத்துடன் திண்மக்கழிவகற்றல் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்.

நாங்கள் வகுத்த திட்டங்கள் முழுமைப்படுத்தியிருந்தால் துறைமுக நகர அபிவிருத்தி முழுமைப்படுத்தப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டிருக்கும். கடந்த அரசு அபிவிருத்தி நிர்மாணப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை. அரசியல் பழிவாங்கல்களுக்கே முன்னுரிமை வழங்கியது. எனவே, இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திகள் எமது ஆட்சியில் முழுமைப்படுத்தப்படும்” – என்றார்.

Comments are closed.