மம்தா பானர்ஜியின் தலைவிதியை தீர்மானிக்கும் இடைத்தேர்தல் இன்று ! பவானிபூரில் குறைவான வாக்குப்பதிவு

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இன்று பிற்பகல் நிலவரப்படி 35.97 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்எல்ஏவும், வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார். இடைத்தேர்தல் இன்றும் (செப்.30), வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்கிறது.

பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார்.

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 6,97,164 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதுபோலவே ஜங்கிபூர் மற்றும் சமஸ்ர்கஞ் ஆகிய தொகுதிகளிலும் இன்று காலை தொடங்கி தேர்தல் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி ஜங்கிபூர் தொகுதியில் 53.78 சதவீத வாக்குகளும், சமஸ்சர்கஞ்ச் தொகுதியில் 57.15 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. அதேசமயம் பவானிபூர் தொகுதியில் 35.97 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.