ரிஷாத்துக்குப் பிணை: அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் வரவேற்பு.

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையளிக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் விடுதலை குறித்து அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் மகிழ்ச்சியடைகின்றது. இது தொடர்பான நீதிமன்ற வழக்கு அமர்வுகளை எதிர்காலத்திலும் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் மிக நெருக்கமாகக் கண்காணிக்கும்.”

– இவ்வாறு அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ ருவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், 24 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டம் (தற்காலிகப் பிரிவு) 1979 இன் 48 ஆவது சட்டப் பிரிவின் கீழ், சி.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், 177 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டு பின்னர், இம்மாதம் 14 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாத் பதியுதீனின் வழக்கு தொடர்பில் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தது.

உலகளாவிய ரீதியில் 13 பிராந்திய நாடாளுமன்றங்களையும், 179 நாடுகளிலுள்ள நாடாளுமன்றங்களில் அங்கத்துவத்தைக் கொண்டதுமான அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் ஒரு சர்வதேச அமைப்பாகும்.

1889ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஒன்றியம், ஜனநாயக ஆட்சியையும், அதன் பொறுப்புக் கூறலையும் ஊக்குவித்து, உத்வேகமளிக்கும் ஆரம்ப இலக்கைக் கொண்டதாகும். அத்துடன், இந்த ஒன்றியம் ஐ.நா பொதுச் சபையில் நிரந்தரமான அவதானிப்பாளர் தகைமையையும் பெற்றுள்ளது.

ஐ.நா. சபை விவகாரங்களில் குறிப்பிடத்தக்களவு தமது செல்வாக்கைச் செலுத்தி வரும் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம், ஐ.நா. அமர்வுகளில் எண்ணற்ற பிரேரணை நிறைவேற்றலிலும் தனது பங்களிப்பை நல்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் புலன் விசாரணைகள் ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படுவதுமில்லை.

மேலும், இந்த வருடம் நவம்பர் மாதம் ஸ்பெயின், மட்ரிட் நகரில் இடம்பெறவிருக்கும் அமர்வின்போதும், ரிஷாத் பதியுதீனின் கைது தொடர்பிலும் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் தனது கவனத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.