கோட்டா அரசு வீழ்வது உறுதி! – இராதா திட்டவட்டம்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசு வீழ்வது நிச்சயம். அடுத்த தேர்தலில் சிறப்பானதொரு அரசை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் அறைகூவல் விடுத்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் பொகவந்தலாவையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பளம் இன்னும் முறையாக – முழுமையாகக் கிடைக்கவில்லை. சம்பளப் பிரச்சினை ஒருபுறம், மறுபுறத்தில் விலையேற்றம் என்ற தாங்க முடியாத சுமை.

சமையல் எரிவாயு, பால்மா மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. இதனால் வாழ்க்கைச் சுமையும் அதிகரித்துள்ளது.

ஆசிரியர்கள், மின்சார சபை ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள் என அனைவரும் இன்று வீதிக்கு இறங்கிவிட்டனர். யார் வேண்டுமானாலும் எப்படியும் பொருட்களை விற்கலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளது. எது எப்படி இருந்தாலும் இந்த ஆட்சி வீழ்வது உறுதி. நல்லதொரு அரசை உருவாக்க மக்கள் அடுத்த தேர்தலுக்குத் தயாராக வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.