சம்பள முரண்பாட்டுக்கு உரிய தீர்வு கோரி அதிபர் – ஆசிரியர்கள் மாபெரும் போராட்டம்!

தேசிய எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு அதிபர் – ஆசிரியர் ஒன்றிணைந்த சங்கத்தால் இன்று நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில், அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உரிய தீர்வைப் பெற்று தருமாறு கோரி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஹட்டனில் இடம்பெற்றது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டப் பேரணியையடுத்துப் பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுட்டனர்.

மல்லியப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி பிரதான வீதியூடாக ஹட்டன் மணிக்கூண்டு வழியாக பிரதான பஸ் தரிப்பிடம் வரை வந்தது. அங்கு அதிபர் – ஆசிரியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அதிபர் – ஆசிரியர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நீண்டகாலக் கோரிக்கையான அதிபர் – ஆசிரியர்களின் கொடுப்பனவை வழங்கக் கோரியும், கல்வித்துறையிலுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தரக் கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.