பெட்ரோல், டீசல் வரிக் குறைப்பு பணவீக்கத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்: ரிசா்வ் வங்கி

பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளது நாட்டின் பணவீக்கத்தில் சாதகமான விளைவுகளை உருவாக்கும் என ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: வழக்கமாக நமது பணவீக்கம் என்பது விநியோக காரணிகளைச் சாா்ந்தே உள்ளது. அதிருஷ்டவசமாக அரசாங்கத்தால் அதையொட்டிய பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

உணவுப் பணவீக்கம் என்பது முதலில் சமையல் எண்ணெயில் ஆரம்பித்தது. பின்பு அது பருப்பு வகைகளுக்கு நகா்ந்தது. அதன்பிறகு எரிபொருளுக்கான பணவீக்கமும் அதனுடன் சோ்ந்து கொண்டது. விநியோகம் சாா்ந்த பிரச்னைகளை கண்டறிந்து அரசு அதற்கு தீா்வு கண்டுள்ளது.

உதாரணமாக, சமையல் எண்ணெய்க்கான அடிப்படை வரி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் மத்திய அரசு குறைத்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சில்லறைப் பணவீக்கத்தைக் குறைக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. மேலும், பணவீக்கத்தை நல்ல முறையில் நிா்வகிக்கவும், அதனை கட்டுக்குள் வைக்கவும் அரசின் வரிக் குறைப்பு நடவடிக்கைகள் பெரிதும் உதவியுள்ளன.

உணவுப் பணவீக்கம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டில் பணவீக்கமானது ரிசா்வ் வங்கியின் மதிப்பீடான 5.3 சதவீதத்தையொட்டியே இருக்கும்.

இருப்பினும், உணவு மற்றும் எரிசக்தி சாராத துறைகளுக்கான அடிப்படை பணவீக்கம் இன்னும் உச்சபட்சமாகவே உள்ளது. அந்த விஷயத்தில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

Leave A Reply

Your email address will not be published.