பெண்களை இழிவாகப் பேசுகின்ற எம்.பியை இடைநிறுத்த வேண்டும்! – மக்கள் சக்தி அமைப்பு வலியுறுத்து.

“பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் பெண்களை அவதூறாக அல்லது இழிவாகப் பேசுவாராயின் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து 3 மாதங்கள் பாராளுமன்ற அமர்வுகளில் இருந்து இடைநிறுத்த வேண்டும்.”

இவ்வாறு மக்கள் சக்தி அமைப்பின் செயலாளர் பிரியந்த விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உலகளவில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் வாய்மூல அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நாட்டின் உயர்பீடமான பாராளுமன்றத்திலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இது பெரும் பாதிப்புக்கு வழிவகுக்கும்.

உலகளாவிய ரீதியாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக துன்புறுத்தல்களும், வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இதற்கு எதிராக 1991ஆம் ஆண்டு வுமன்ஸ் க்ளோபல் லீடர்ஷிப் இன்ஸ்ரிடியூட் எனப்படும் செயற்பாட்டாளர்களால் அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்பின்னர் நவம்பர் 25ஆம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான சர்வதேச தினமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 16 நாட்களுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்படும்.

பாலின ரீதியான வன்முறைகளைத் தடுப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரால் யுனிடெக் என்ற அமைப்பின் ஊடாக 2030ஆம் ஆண்டுக்குள் வன்முறைகள், துன்புறுத்தல்கள், சித்திரவதைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.