பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள்….

பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தினால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் சமீபத்தில் பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டன.

இந்த பாதுகாப்பு உபகரணங்கள், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் (ஓய்வு) பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறு கையளிக்கப்பட்ட உபகரணங்களில் ஒரு ட்ரோன் ஜாமர் மற்றும் பாதுகாப்பு பொறிமுறையை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படும் பாதுகாப்பு தகவல் தொடர்பு சாதனங்கள் என்பன அடங்குகின்றன.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு.தம்மிக்க தசநாயக்க, சார்ஜன்ட் அட்-ஆர்ம்ஸ், திரு. நரேந்திர பெர்னாண்டோ, எயார் வைஸ் மார்ஷல் எம்.டி.ஏ.பி.பயோ, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரேணுகா ரோவல், பிரதிப் பணிப்பாளர் நாயகம் கெப்டன் டி.டி.எஸ். டி சில்வா, பாராளுமன்ற பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் மஞ்சுளா செனரத் ஆகியோர் கலந்துகொண்டார்.

இவ்வாறு கையளிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் சந்தைப் பெறுமதி விலை 19 மில்லியன் ரூபாய் ஆகும். இருப்பினும், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அவிருத்தி மையம் இதனை 07 மில்லியன் ரூபாய் செலவில் உள்நாட்டில் தயாரித்துள்ளது.

இந்த உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களை வழங்கியமைக்காக பாதுகாப்புப் படையினருக்கு கெளரவ. சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். இதன் போது கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், எமது படையினர், பாதுகாப்புப் படைக்கு மட்டுமல்ல ஏனைய தேசியத் தேவைகளுக்கும் உயர் தொழில்நுட்ப ரீதியான உபகரணங்களைத் தயாரிக்கும் திறன்களை கொண்டுள்ளதாவும் அதன் மூலம் தேசிய நிதியினை பாதுகாக்கும் திறனை பாதுகாப்புப் படையினர் வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக 2020 ஜூலையில் நடைபெற்ற கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சியின் போது அடையாளம் காணப்பட்ட பாதுகாப்புத் தேவைக்கு இணங்க இந்த உபகரணத் தொகுதிகள் வழங்கப்படுவதாக சார்ஜென்ட் அட் ஆர்ம்ஸ் திரு.நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.