யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் மௌன தொழிற்சங்கப் போராட்டம்!

யாழ்ப்பாணம் பல்பகலைக்கழக ஊழியர் சங்கமும் நாளை மௌன தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது என அதன் தலைவர் த.சிவரூபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்றிரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டுக் குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்டகாலமாக நிலவி வரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு 23.11.2021 வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் மேற்படி அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.

அந்தவகையில் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவில் அங்கம் வகிக்கின்ற எமது பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் (02.12.2021) நண்பகல் 12 மணிக்கு மேற்படிப் போராட்டத்தை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் கொரோனா சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடித்து முன்னெடுக்கவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

எனவே, சகல கல்விசாரா ஊழியர்களையும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.