குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் அறிமுகம் : சீரம் நிறுவனம் அறிவிப்பு

குழந்தைகளுக்கு செலுத்தும் வகையிலான கொரோனா தடுப்பூசி இன்னும் 6 மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது மருத்துவப் பரிசோதனையில் இருந்து வரும் நோவாவேக்ஸ் தடுப்பூசி நல்ல பலன்களை அளித்துள்ளதாகவும், இதனை 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த முடியும் என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நைஜீரியாவில் இருந்து சென்னை திரும்பிய நபரின் மூலம், 3 மணிநேரத்தில் ஒரே குடும்பத்தில் 6பேருக்கு கொரோனா பரவியுள்ளது, அந்த குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்கும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

நைஜீரியாவில் இருந்து கடந்த 10ம் தேதி தோஹா வழியாக ஆண் பயணி ஒருவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். நைஜீரியா நாடு கொரோனா ஆபத்தில்லா நான் ரிஸ்க் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆபத்தில்லா நாடுகளில் இருந்து வருவோரில் அனைவருக்கும் RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை. 2 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒரு நாட்டில் இருந்து புறப்பட்டு மற்றொரு நாடு வழியாக வருவோருக்கு, முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனை செய்து மாதிரிகள் எடுக்கப்படுகிறது. இந்த வகையில் சென்னைக்கு 10ம் தேதி வந்த நபருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பொதுவாக ஆபத்தில்லாத நாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனை செய்து அவருக்கு முடிவு வரும் வரை விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியதில்லை.

இதனால் அந்த நபர் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். ஆனால் 3 மணி நேரத்தில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் கிண்டி கிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 10ம் தேதியே அவரின் வீட்டில் இருந்த ஒரு ஆண், மற்றும் 5 பெண்கள் என குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கும் பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

ஆனால் இரண்டு நாட்களுக்கு பிறகு குடும்ப உறுப்பினர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களுக்கும் கொரோனா உறுதியானது. பொதுவாக ஒமைக்ரான் பாதித்திருந்தால் அவரது பரிசோதனை முடிவுகளில் S-gene எனப்படும் மரபணு இருக்காது. நைஜீரியாவில் இருந்து சென்னை திரும்பிய நபரின் குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்கும் S-gene இல்லாமல் உள்ளதால், இவர்கள் அனைவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இவர்களின் பரிசோதனை மாதிரிகள் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 7 பேரின் பரிசோதனை முடிவுகளும் இன்று வெளியான பின் தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டதாத என்பது தெரிந்து விடும்.

Leave A Reply

Your email address will not be published.