ஹெலிகாப்டர் விபத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது அடுத்தது என்ன?

அதென்ன கருப்பு பெட்டி (Black Box)? முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர், ஊட்டி குன்னூரில் விபத்துக்குள்ளாகி, அவர் மனைவி உட்பட, உடன் சென்ற 14 பேரில், 13 பேர் இறந்த சம்பவத்தில், பலருக்கும் இது விதியா, சதியா என்ற சந்தேகம் உள்ளது.இந்த ஹெலிகாப்டர் தரை இறங்கும் பொழுது, காலநிலையால் ஏற்பட்ட விபத்தா, இயந்திரக் கோளாறால் நடந்ததா அல்லது எதிரி நாட்டு சதியா, நம் நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் கைகோர்த்து செய்த சதியா என பல யூகங்கள் இருந்தாலும், இந்தக் கேள்விளுக்கு, கருப்பு பெட்டி மூலமாக பதில் கிடைக்கும் என்று பல அதிகாரிகள் நம்புகின்றனர்.

அதென்ன கறுப்பு பெட்டி? அது எப்படி இயங்குகிறது?ஒவ்வொரு விமானத்திலும்… ஹெலிகாப்டரோ, போர் விமானமோ, ஜெட் விமானமோ எதுவாக இருந்தாலும் எல்லா விமானத்திலும் இந்த கருப்பு பெட்டி எனப்படும் பிளாக் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். பிளாக் பாக்ஸ், 1954ஆம் ஆண்டு, டேவிட் வாரன் என்ற ஆஸ்திரேலிய விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. பிளாக் பாக்ஸ் துருப்பிடிக்காத, எஃகு மற்றும் டைட்டானியத்தால் வடிவமைக்கப்பட்டது. காக்பிட் எனப்படும் விமானி அறையில் நடக்கும் அத்தனையையும், ஒலி வடிவில் பதிவு செய்வதே பிளாக் பாக்ஸ் ஆகும். எந்த ஒரு விமானமோ, ஹெலிகாப்டரோ, விபத்தாலோ, காலசூழ்நிலைகளாலோ விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழும்பொழுது விமானி, விமான நிலையத்தில் உள்ள விமான அறைக்கு என்ன பதிவு செய்தார், அவர்கள் என்ன பதில் பேசினார்கள் என அத்தனையும் பதிவு செய்யப்படும்.

பெயர் தான் கருப்பு பெட்டியே தவிர, அந்தப் பெட்டி கருப்பு நிறத்தில் இருக்காது. இதன் நிறம், ஆரஞ்சு கலரில் இருக்கும். சரியாக சொல்லவேண்டுமென்றால், இளம் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. முழுக்க முழுக்க ஸ்டைன்லஸ் ஸ்டீலால் வடிவமைக்கப்பட்டது. இந்தப் பெட்டி 1000 முதல் 1500 செல்சியஸ் தீ விபத்து ஏற்பட்டாலும், பல அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் நொறுங்காதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலில் பல அடி ஆழத்தில் இருந்தாலும், இந்தப் பெட்டிக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படாதவாறு வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக இந்த கறுப்புப் பெட்டி, பூமியின் புவியீர்ப்பு விசையை விட மூவாயிரம் மடங்கு அதிக விசையை தாங்கும்படி வடிவமைக்கப்பட்டது.

அதனால்தான் தற்போது ஏற்பட்ட விபத்தில், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நெருப்பில் எரிந்தாலும், ராணுவத்தால் இருந்த கருப்பு பெட்டியை சேதமில்லாமல் கைப்பற்ற முடிந்தது. இந்த கறுப்புப் பெட்டிகள் எங்கு விழுந்தாலும், அது விமான நிலையத்தில் உள்ள விமான அறைக்கு சமிக்ஞை செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடல் ஆழத்தில், அடர்ந்த வனத்தில் அல்லது பனியில், மலைமுகட்டில் எங்கு விழுந்தாலும், இது எழுப்பும் சமிக்ஞைகளை எளிதாக வைத்து கண்டுபிடித்துவிடலாம். கருப்புப் பெட்டி இரண்டு விதமாக செயல்படும்.

1. விமானி, விமான அறையிலிருந்து அவருடன் என்ன பேசினார், விமான அறையிலிருந்து விமானிக்கு எந்த விதமான அறிவுறுத்தல் கிடைத்தது என இந்த கருப்பு பெட்டி பதிவு செய்திருக்கும். இதை ஆங்கிலத்தில் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் ( CPR ) எனக் கூறுவர்.

2. இந்த விமானம் என்ன வேகத்தில் விபத்துக்குள்ளானது, எந்த காலநிலையில், சூழ்நிலையில் விபத்துக்குள்ளானது அல்லது வேறு ஏதாவது இடித்து, மோதி இந்த விமானம் விபத்துக்குள்ளானதா? என்று ஒரு 400 பதிவுகளை பதிவு செய்யும் கருவி பிஃளைட் டேட்டா ரெக்கார்டர் எனப்படும் ( FDR ).

இந்த இரண்டு கருவிகளாலும் பிளாக் பாக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த கறுப்புப் பெட்டி கிடைத்தவுடன், அதன் தரவுகளை ஆராய்ந்து, எப்படி விபத்து நடந்தது, எப்படி விபத்து நடக்காமல் , இனிமேல் எப்படி தடுக்கலாம் என விஞ்ஞானிகள் ஆராய்ந்து, மேலும் இந்த கருப்பு பெட்டிக்கு மெருகேற்றுகிறார்கள். கருப்புப் பெட்டி கிடைத்துவிட்டது; வெள்ளை அறிக்கை வெளியாகும் என நம்புவோம். என குறிப்பிட்டுள்ளார் கோகுலகிருஷ்ணன்.

Leave A Reply

Your email address will not be published.