தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்தவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் புதிதாக 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டிலேயே அதிகபட்சமாக அங்கு 32 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் இதுவரை 17 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம், ஆந்திரா, சண்டிகர் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா ஒருவருக்கும், தெலங்கானாவில் 2 மற்றும் கர்நாடகத்தில் 3 பேருக்கும், குஜராத்தில் 4 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 6 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியான நிலையில், இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 544 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில், 640 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 37 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததால், மரணமடைந்தோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றில் இருந்து 692 பேர் மீண்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 26 லட்சத்து 93 ஆயிரத்தை கடந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்து 548 பேர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்டங்களை பொறுத்த வரை அதிகபட்சமாக சென்னையில் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் 106 பேர், ஈரோட்டில் 49 பேர், செங்கல்பட்டில் 48 பேர், திருப்பூரில் 45 பேரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி, தேனி, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிதாக ஒருவருக்கு கூட தொற்று கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.