ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் மசோதா: எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றம்

ஆதார் (Aadhar) எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை (Voter ID) இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவை திங்கள்கிழமை கூடியதும், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தேர்தல் சீர்திருத்த மசோதா 2021- ஐ அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களின் உரிமைகளில் தலையிடாது என்றும் கள்ள ஓட்டுக்களை தடுப்பது மட்டுமே குறிக்கோள் என்றும் கூறினார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவிற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் சீர்திருத்த மசோதா உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது என காங்கிரஸ் எம்பிக்கள் மனிஷ் திவாரி மற்றும் ஆதிர் ரஞ்சன் ஆகியோர் தெரிவித்தனர். மசோதா குறித்து பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர், இந்திய குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் வாக்குரிமையை சீர்திருத்த மசோதா அளிப்பதாக கூறினார்.

ஆதார் எண், குடியிருப்புக்கான ஆதாரம் ஆகும். இது குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல. நீங்கள் வாக்காளர்களிடம் ஆதார் எண் கேட்டால், அந்த ஆவணங்கள் குடியிருப்பை மட்டும் சார்ந்திருக்கும். குடியுரிமையை சார்ந்து அல்ல. நீங்கள் குடியுரிமை இல்லாதவர்களுக்கும் வாக்குரிமையை திணிக்கிறீர்கள். பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அமளி காரணமாக மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது

நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலினைக்கு மசோதாவை அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. ஒரே நபர் வெவ்வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் வகையில் ஆதார் எண் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆண்டில் 4 முறை வாய்ப்பு வழங்கப்படும்.

பாதுகாப்பு படையில் பணியாற்றும் வீரர்கள் சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க முடியாத பட்சத்தில் அவருக்கு பதிலாக அவரது மனைவி வாக்களிக்க ஏற்கெனவே சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால், பணியில் இருக்கும் பெண் அதிகாரியின் கணவர் அவருக்கு பதிலாக வாக்களிக்க முடியாது. புதிய மசோதாவில் பெண் அதிகாரிக்கு பதிலாக அவரது கணவர் வாக்களிக்க உரிமை அளிக்கப்படும் . இதற்காக wife என்ற சொல் நீக்கப்பட்டு spouse என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் எந்த கட்டடத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளலாம்.

2015 ஆம் ஆண்டில் ஆதார் எண்ணையும் வாக்காளர் அடையாள அட்டையையும் இணைக்க மத்திய அரசு திட்டம் கொண்டுவந்தது. ஆனால் இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

நீதிமன்றம் தடை விதிப்பதற்கு முன்னால், ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் அவ்விரு மாநிலங்களிலும் 55 லட்சம் பேரின் வாக்குரிமை இழந்தனர்.

2011 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஐந்து கோடி பேரின் வாக்குரிமை பறிபோகும்’ என கண்டறியப்பட்டது. ஒருவரின் மதம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குரிமையை பறிக்க முடியும் என எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.