ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்: காயத்தால் விலகினார் டோமினிக் திம்.

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து டோமினிக் திம் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி தொடங்குகிறது. உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்த தொடரின் இறுதி போட்டி ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தொடர் தொடங்குவதற்கு 3 வாரங்களே உள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பல்வேறு டென்னிஸ் நட்சத்திரங்களும் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரஃபேல் நடால், டெனிஸ் ஷபோவலோவ், ஒன்ஸ் ஜபேயுர், ஆண்ட்ரே ரூப்லெவ் மற்றும் பெலிண்டா பென்சிக் ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நட்சத்திர டென்னிஸ் வீரர் டோமினிக் திம் காயம் காரணமாக விலகியுள்ளார். உலகின் முன்னாள் நம்பர் 3 வீரரான இவர் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்தவர். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இவர் இந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.