11 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்- பீகாரில் அதிர்ச்சி- விசாரணைக்கு உத்தரவு

பீகாரைச் சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவர் கொரோனா, ஓமைக்ரான் பீதியில் 11 டோஸ் தடுப்பூசிகளை குத்திக் கொண்டது அங்கு மருத்துவர்களையும் அதிகாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அது சரி! 11 டோஸ்களை ஒருவரே எப்படி போட்டுக்கொள்ள முடியும்? அனுமதி எங்கிருந்து கிடைத்தது? இது எப்படி நடந்தது என்று விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் அந்த முதியவர் 11 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு தான் சுறுசுறுப்பாக இருப்பதாக வேறு கூறிக்கொள்கிறார் அந்த முதியவர்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தநிலையில் வரும் 10-ம் தேதி முதல்தான் முதியோர், இணைநோய்கள் இருப்போர்,முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

ஆனால், பிஹாரின் மதேபுரா மாவட்டம், சாவுசா நகரைச் சேர்ந்த 84 வயதான பிரம்மதேவ் மண்டல், 11 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளதைக் கேட்டு மருத்துவர்கள், அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

ஒருவருக்கு இரு டோஸ் செலுத்திவிட்டால்,இணைதளத்தில் தானாகவே லாக் செய்துவிடும். அவ்வாறு இருக்கையில் பிரம்மதேவ் மண்டல் எவ்வாறு 11 டோஸ் செலுத்தியிருக்கமுடியும் , இது எப்படி சாத்தியம் என்று புரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர், இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக முதியவரே என்ன கூறினார் என்றால் அது 11 டோஸ் தடுப்பூசியை விடவும் ஆச்சரியமளிக்கும், “தடுப்பூசி மூலம் எனக்கு ஏராளமான பலன் கிடைத்திருக்கிறது. இடுப்பு வலி, முதுகுவலி இருந்தது அது நின்றுவிட்டது. சளித்தொந்தரவு, இருமல், மூச்சிரைப்பு போன்றவையும் இப்போது இல்லை. இதுபோன்ற தடுப்பூசிகளை அரசு சிறப்பாக தயாரித்துள்ளது. அனைத்து மக்களுக்கும் ஏன் அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தக்கூடாது.

நான் என்னுடைய ஆதார் எண்ணை மாற்றவில்லை, செல்போன் எண்ணையும் மாற்றவில்லை. ஒவ்வொருமுறையும் தடுப்பூசி செலுத்தச் செல்லும்போது இதை அளித்துதான் தடுப்பூசி செலுத்தினேன். யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை. கண்காணிப்பும் இல்லை. இதுவரை 11 டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டேன்.

சமீபத்தில் 12-வது டோஸ் செலுத்த நான் ஆரம்ப சுகாதார மையத்துக்குச் சென்றேன். ஆனால், தடுப்பூசி இருப்பு இல்லை என திருப்பி அனுப்பினார்கள். இருந்திருந்தால் 12-வது டோஸ் செலுத்தியிருப்பேன். செப்டம்பர்மாதத்தில் மட்டும் 3 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன், இந்த வாக்சின் ஒரு அமிர்தம். மோடி அரசை காங்கிரஸ் விமர்சிப்பது தவறு. தவறாக மோடி அரசைக் குறிவைக்கின்றனர்.

அரசிடம் சரியான கண்காணிப்பு சிஸ்டம் இல்லை, ஆகவே இன்னும் கூட டோஸ்களை எடுத்துக் கொள்வேன்.” என்றார், இவர் இத்தனைக்கும் ஒரு அரசு ஊழியர், போஸ்டல் துறையில் வேலை பார்த்தவர்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இவர் உண்மையில் 11 டோஸ்கள் எடுத்துக் கொண்டாரா என்பதைக் கண்டறிய முனைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.