மத்திய வங்கி ஆளுநரைப் போட்டுத் தாக்கிய சஜித்!

பணம் அச்சடிக்கப்பட்டாலும் பணவீக்கம் அதிகரிக்காது எனப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் கூட தனக்குத் தெரியாதவர் போல் மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்த நாட்டை ஆர்ஜென்டினா, சிம்பாப்வே, வெனிசுவேலா போன்ற நாடுகளை நோக்கித் தள்ளவே மத்திய வங்கியின் ஆளுநர் செயற்பட்டு வருகின்றார் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசின் தன்னிச்சையான தீர்மானங்களால் முழு நாடும் அழிவை நோக்கிச் சென்றுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்படுத்தப்படும் ‘ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு’ திட்டத்துக்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் ‘ஜன சுவய’ திட்டத்தின் கீழ் ‘சத்காரய’ திட்டத்தின் 35ஆவது கட்டமாக, 24 இலட்சத்து 57 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் இன்று வவுனியா மாவட்ட தேசிய வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் ‘ஜன சுவய’ கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ‘எதிர்க்கட்சியின் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

இதுவரை 34 கட்டங்களில் 10 கோடி 16 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.