குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கே.பாலாகிருஷ்ணன் வலியுறுத்தல்

மத்திய அரசிடம் பேசி வெள்ள நிவாரணத்தை பெற்று இந்த பொங்கல் விழாவையொட்டி குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக முன்வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வேடசந்தூரில் நடைபெற்ற சிபிஎம் மாவட்ட மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் சிறுபான்மையின மக்கள் மீது கொலை வெறித்தாக்குதலை நடத்தி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் தினத்தன்று உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சர்ச்சுகளை இடித்துத் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி ஒரு வார்த்தை கூட கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அரித்துவாரில் பேசிய பேச்சு குறித்து காவல்த்துறையினர் சாதாரணமாக ஜாமீனில் வெளிவருகிற வழக்குகளை போட்டுள்ளனர்.

இந்த கொலைவெறி சம்பவங்களுக்கு பின்னால் மத்திய பாஜக அரசாங்கமே இருக்கிறது என்பது தான் எங்களுடைய பகிரங்கமான குற்றச்சாட்டு. எனவே இந்திய நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற சக்திகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, பெரும்பான்மை சிறுபான்மை என்று மக்களை பாகுபடுத்தி கொலைவெறி தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் எல்லா மதசார்பற்ற கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்திருக்கிறார்களோ, அதே போல இந்தியாவில் இருக்கிற காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எல்லா மதசார்ப்பற்ற கட்சிகளும் ஒன்று சேர்ந்து நாட்டுக்கு ஏற்பட்டிருக்கிற பேராபத்தை தடுத்து நிறுத்த வேண்டும். எதிர்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக பாஜக பலரையும் களத்தில் இறக்கிவிட்டுள்ளது. மம்தா பானர்ஜியும் அதற்கு துணை போவது போல் தான் தெரிகிறது. இது ஆபத்தானது.

தமிழக முதல்வர் பொங்கல் பரிசுத்திட்டத்தை அறிவித்துள்ளார். மழை வெள்ளம் வந்திருக்கிற சூழ்நிலையில் நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. நிதி நெருக்கடி கடுமையாக உள்ளது என்பது உண்மை தான். அதிமுக கஜானாவை காலி செய்து போயுள்ள நிலை உள்ளது. பிரதமர் மோடி வருகிற 12ம் தேதி வருவதாக அறிவித்துள்ளார். எனவே பிரதமரிடம் பேசி மழை வெள்ள நிவாரணத்தை பெற்று இந்த பொங்கல் விழாவையொட்டி குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.