வேகமெடுக்கும் ஒமைக்ரான்: எச்சரிக்கையாக இருங்கள்.. பீதி அடையத் தேவையில்லை: பிரதமர் மோடி

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், பீதி அடையத் தேவையில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. டெல்லி, தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சுகாதார அமைச்சகம் கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில்` 2,47,417 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது நேற்றைய பாதிப்பை விட 27% கூடுதலாகும். 84,825 பேர் குணமடைந்துள்ள நிலையில், 380 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்தனர். தினசரி பாசிட்டிவிட்டி விகிதம் 13.11% அளவுக்கு கடுமையாக அதிகரித்துள்ளது.

புதிய வகை ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் கடுமையாக அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை 5,488 பேர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து இன்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் முந்தைய வகைகளை விடப் பல மடங்கு வேகமாகப் பரவி வருகிறது. நாம் தற்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அதேநேரத்தில் மக்கள் அச்சப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பண்டிகைக் காலத்தில் மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு குறையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாம் எந்தவொரு திட்டத்தை அமல்படுத்தும் போதும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் நினைவில் கொள்வது மிகவும் முக்கியம். பொருளாதாரத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும்.

அதனால், மாநில அளவில் கட்டுப்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. லேசான பாதிப்பு ஏற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு முடிந்தவரை வீடுகளிலேயே வைத்து சிகிச்சை அளிக்கலாம்.

தொடர்ந்து தடுப்பூசி பணிகள் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 92% பேருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல சுமார் 70% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

10 நாட்களில் 15-18 வயதானவர்களில் சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது வரவிருக்கும் சவாலை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதைக் காட்டுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.