துன்பத்தை அறிந்த மக்களால் உருவாக்கப்பட்டதே நமது அரசு.

நாட்டு மக்களின் துன்பத்தை அறிந்த மக்களால் உருவான அரசே தற்போதைய அரசு என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இந்திய அரச நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையகப் பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளைப் பூரணப்படுத்தி அதனைப் பயனாளிகளுக்குக் கையளிப்பதற்கான திறப்பு வழங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.

கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த இந்திய வீட்டுத்திட்டத்தை தற்போதைய அரசு மலையக பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது.

அமரர். தொண்டமான் நாட்டில் ஸ்திரமான அரசு ஒன்றை உருவாக்கப் பாடுபட்டவர். அதேபோல் தற்போதைய ஜீவனும் மலையக மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டு வருகின்றார்.

மலையகத் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தின் மூலமே நாட்டுக்கு அந்திய செலவாணி கிடைக்கின்றது.

நாட்டில் உருவான ஒவ்வொரு அரசும் மலையக மக்கள் தொடர்பில் பேசினார்கள். ஆனால், ஆட்சியமைத்ததுடன் உங்கள் துக்கங்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

சுதந்திரம் பெற்று 74 வருடங்களாகியும் மலையக மக்களுக்கு உரிய காணிகள் வழங்கப்படவில்லை.

அதேபோல் சுதந்திரக் கல்வியும் மலையக மாணவர்களுக்கு உரிய வகையில் கிடைக்கவில்லை. எனவே, ஒவ்வொரு அரசுக்கும் மலையக சூழலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் ஊக்குவிக்க வேண்டிய கடமை உண்டு.

அதன்படி இன்றைய அரசு சிரமங்களுக்கு மத்தியிலும் தடைப்பட்டிருந்த அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்கின்றது.

அதற்கமைய மலையகப் பகுதிகளில் வீதிகள் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன.

பெருந்தோட்டப் பாடசாலைகள் இன்று தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. பொருளாதார ரீதியில் உலகமும் எமது நாடும் பல சவால்களை சந்தித்துள்ளது.

ஜனாதிபதியும், பிரதமரும் தலையிட்டு பெருந்தோட்ட மக்களுக்குக் கோதுமை மா சலுகையை வழங்கத் தீர்மானித்தனர்.

அதன்படி 80 ரூபாவுக்கு கோதுமை மா வழங்கப்படுகின்றது. ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமையவே இந்த விடயம் சாத்தியமாகியுள்ளது.

ஆகவே, நாட்டு மக்களின் துன்பத்தை அறிந்த மக்களால் உருவான அரசே இதுவாகும். பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் பெருந்தோட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.